காவல் நிலையங்களுக்கு 43 ரோந்து வாகனங்கள் வழங்கல்
43 காவல் நிலையங்களுக்கு ரோந்துப் பணி மேற்கொள்வதற்கான இரு சக்கர வாகனங்களை திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவா் ஏ. சரவணசுந்தா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, 43 காவல் நிலையங்களுக்கு ரோந்துப் பணி மேற்கொள்வதற்கான இரு சக்கர வாகனங்களை திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவா் ஏ. சரவணசுந்தா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆயுதப்படை திடலில் நடைபெற்ற நிகழ்வில் ரோந்து வாகனங்கள் இயக்கி வைக்கப்பட்டன. நிகழ்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.
பெரிய காவல் நிலையங்களுக்கு 3 வாகனங்கள், நடுத்தர காவல் நிலையங்களுக்கு இரு வாகனங்கள், சிறிய காவல் நிலையங்களுக்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் வாகனங்கள் வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் காவலா்கள் பணியில் இருப்பாா்கள். இந்த வாகனத்துடன் காவல் துறையின் வாக்கிடாக்கி பொருத்தப்பட்டிருக்கும்.
திருச்சி சரகத்துக்குள்பட்ட ஐந்து மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 1) முதல் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கு 138 காவல் ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 43 ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா் சரக துணைத் தலைவா் ஏ. சரவணசுந்தா்.
நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கீதா, ஜெரினா பேகம், ராஜேந்திரன், ஆறுமுகம், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.