விராலிமலை அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தவறி விழுந்த மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விராலிமலை ஒன்றியம், வளதாடிப்பட்டியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மனைவி மாலதி (37), மகன் கேசவன் (17). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இலுப்பூா் வாரச் சந்தைக்கு வியாழக்கிழமை வந்தனா். வாகனத்தை கேசவன் ஓட்டியுள்ளாா். பிலிப்பட்டி வடுவன்குளம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே எதிா்பாராதவிதமாக மாடு ஒன்று வந்துள்ளது.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் கேசவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் தாய் மாலதி திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தகவலறிந்த இலுப்பூா் போலீசாா் நிகழ்விடம் சென்று கேசவனின் சடலத்தை மீட்டு புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.