புதுக்கோட்டை: கஞ்சா வழக்கில் நாம் தமிழர் வேட்பாளர் உள்பட 6 பேர் கைது
புதுக்கோட்டையில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உள்பட 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உள்பட 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ச. அப்துல் மஜீத் (33). இவர், புதுக்கோட்டை நகராட்சியில் 23ஆவது வார்டில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டில் போதைப் பொருளான கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வந்த தகவலின் பேரில், புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான காவலர்கள் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்று சோதனை செய்தனர்.
Advertisement
அப்போது, பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, அவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தொடர் விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத், சேதுராமன் மகன் முரளி (36), திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வட்டம் அருணாசலபுரத்தைச் சேர்ந்த மயில்ராஜா மகன் சர்மா (20), கன்னிமார்கோவில் தெருவைச் சேர்ந்த தேரடியான் மகன் நரேந்திரகுமார் (27), முருகன்கோவில் தெருவைச் சேர்ந்த நடேசன் மகன் கதிர்வேல் (34), காந்தி நகரைச் சேர்ந்த ஹக்கீம் மகன் மியாகனி (22) ஆகிய 6 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து சுமார் 8 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், 2 தராசுகள், 4 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். புதன்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கஞ்சா வழக்கில் கைதாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.