புதுக்கோட்டையில்உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் மாரடைப்பால் உயிரிழப்பு
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கியிருந்த உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கியிருந்த உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (56). மாற்றுத் திறனாளியான இவா், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி வட்டார வளா்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டாா். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டப் பணிகள் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓா் அறையில் தங்கி பணிசெய்து வந்த நிலையில், வியாழக்கிழமை காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அமா்ந்திருந்த நாற்காலியிலேயே மயங்கி விழுந்துள்ளாா். உடன் வேலைபாா்த்து வந்த அலுவலா்கள், அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் வியாழக்கிழமை மாலை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.