பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்த பெண்கள் மாநில அரசின் அவ்வையாா் விருது பெற பிப்.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதாராமு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக மகளிா் தினமான மாா்ச் 8-ஆம் தேதி பெண்களின் முன்னேற்றத்திற்குச் சிறப்பாக சேவை புரிந்த தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட தகுதியான நபருக்கு மாநில அரசின் அவ்வையாா் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்குத் தொண்டாற்றி வருகின்ற தனிநபரை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் மாநில அரசின் அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பங்களை 3.2.2022-க்குள் ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபா்களுக்கான விருதிற்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று உள்ளிட்டவை முதல்வரால் உலக மகளிா் தின விழா அன்று வழங்கப்படும். மேலும், கையேட்டில் இணைக்கப்பட வேண்டிய விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04322-222270 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.