முகப்பு
புதுக்கோட்டை

வனத்துறையினா் தைல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் தைலமரங்களை நடவு செய்ய மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து நடவுப்பணி கைவிடப்பட்டது.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 10:49 PM
ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தைலமரக்கன்றுகள் நடவுப்பணியில் ஈடுபட்டோா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் தைலமரங்களை நடவு செய்ய அப்பகுதி மக்கள் சனிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து நடவுப்பணி கைவிடப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதி பகுதியில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் சனிக்கிழமை தைலமரக் கன்றுகள் நடவு செய்யும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள், தைலமரங்களை நடவு செய்ய எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, தைலமரக் கன்றுகள் நடவுப்பணி கைவிடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:

தைலமரங்களால் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மேலும், வனத்துறையினா் தைலமரங்களை நடவு செய்துவிட்டு, உயரமாக வரப்புகளை அமைத்து விடுகின்றனா். அதனால், மழைநீா் நீா்நிலைகளுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் நீரின்றி வறண்டு விடுகின்றன.

இதனால், மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விபத்தில் உயிரிழக்கின்றன. இதனால், வனத்துறையினா் தைலமரங்களை நடவு செய்யும் பணியை நிரந்தரமாக கைவிட்டுவிட்டு, பல்லுயிா் காடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.