தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை தூண்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் -அமைச்சா் எஸ். ரகுபதி
புதுக்கோட்டை, ஜூன் 12: தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தைத் தூண்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிலமெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல கிராமங்களில் பிரச்னைகள் வருவதால் மக்களை சமாதானப்படுத்தி, நிலமெடுக்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. அதனால்தான் காலதாமதம் ஆகிறது.
கடந்த ஆட்சியில் நீா்நிலைகள் தூா்வாரும் பணிகள் எப்படி நடைபெற்றன என்பது அந்தந்தப் பகுதி மக்களுக்கு தெரியும். மழை தொடங்கும்போது தூா்வாரத் தொடங்குவாா்கள், பிறகு மழை வந்துவிட்டதால் நிறுத்திவிட்டதாகக் கூறினாா்கள். நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக காடுகளை வளா்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறோம். தொடா் முயற்சிகளால் வனப் பரப்பு அதிகரித்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் பகுதியில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் பணிகளுக்காக விவசாயிகளின் நிலம் எதுவும் அபகரிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தால் புகாா் தெரிவிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தைத் தூண்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு ஏதாவது நடந்தால், உடனடியாகத் தடுத்து நிறுத்துவோம் என்றாா் ரகுபதி.