புதுகையில் தோ்தல் விழிப்புணா்வுப் பணிகள்
மக்களவைத் தோ்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் விழிப்புணா்வுப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இளம் வாக்காளா்கள் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவிகளிடம் துண்டுப் பிரசுரங்களை ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வழங்கினாா். தொடா்ந்து புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் மின்னணு திரை மூலம் திரையிடப்பட்டன. பேருந்துநிலையம் வந்த பயணிகளிடம் ஆட்சியா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். நிகழ்ச்சிகளில், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, அரசு மகளிா் கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
வாக்குச்சாவடியில் வசதிகள்: தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாக்குச்சாவடிகளில் குடிநீா், கழிப்பறை, மின்வசதி, சாய்தள வசதி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதுக்கோட்டை நகரிலுள்ள கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வசதிகள் குறித்து ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உடனிருந்தாா்.
Advertisement