விபத்தில் சிக்கியவரிடமிருந்து மீட்கப்பட்ட ரூ. 4.5 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை ஆம்புலன்ஸ் பணியாளா்கள் பத்திரமாக அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
புதுக்கோட்டை கட்டியாவயலைச் சோ்ந்தவா் தியாகராஜன் (50). இவா், பாசிப்பட்டி அருகே உள்ள கீரனூா் - இலுப்பூா் சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரேவந்த காா் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தியாகராஜனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அப்போது அவரது உறவினா்கள் யாரும் உடன் இல்லை. பின்னா் மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினா்களிடம், தியாகராஜன் வைத்திருந்த ரூ.4. 50 லட்சம் பணம் மற்றும் கைப்பேசியை ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளா்கள் பத்திரமாக ஒப்படைத்தனா்.