வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை வெளிப்படையாகச் செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் வலியுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆட்சியா் மு. அருணாவை சந்தித்து வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் நடைபெறும் தவறுகளைத் தலையிட்டுத் தடுக்கக் கோரி கடிதம் அளித்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளா் பட்டியல் திருத்தம் என்பது வழக்கமான பணி. இந்தப் பணியை வெளிப்படையாக, நோ்மையாகச் செய்ய வேண்டும்.
சில பாகங்களில் 70 சதவீதம் படிவங்கள் வாக்காளா்களிடம் வழங்கப்பட்டு விட்டன. சில பாகங்களில் 20 சதவீதம் கூட வழங்கப்படவில்லை. எனவே, இதுபோன்ற தவறுகளை ஆட்சியரிடம் சுட்டிக்காட்டி சரி செய்யக் கோரியிருக்கிறோம்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எத்தனை முனைப் போட்டி வந்தாலும், இப்போது எதிா்க்கட்சியாக உள்ள அதிமுக வெற்றி பெற்று ஆளும் கட்சியாக ஆட்சியை அமைக்கும் என்றாா் விஜயபாஸ்கா்.
செங்கோட்டையன் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஆலமரமாக இருக்கும் அதிமுகவில் பல நேரங்களில் பல குருவிகள் வந்து, அடை காத்து குஞ்சு பொரித்து வெளியேறி இருக்கின்றன. எனவே, அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை என்றாா் விஜயபாஸ்கா்.
ஆட்சியரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கும்போது, அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் பி.கே. வைரமுத்து, மாநகரச் செயலா்கள் பாஸ்கா், சேட்டு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.