முகப்பு
புதுக்கோட்டை

முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தவருக்கு இரு சக்கர வாகனம் வழங்கல்

Updated On : 17 நவம்பர், 2025 at 7:34 PM
தமிழக முதல்வரிடம் மனு அளித்தவருக்கு திங்கள்கிழமை ரூ.1.02 லட்சம் மதிப்புள்ள இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

கடந்த நவ. 10-ஆம் தேதி புதுக்கோட்டை வந்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த மாற்றுத் திறனாளிக்கு ரூ. 1.02 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் சிக்கத்தான்குறிச்சியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் இளையராஜா. தனக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும் என முதல்வா் ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தாா்.

இதன்தொடா்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ. 1.02 லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை இளையராஜாவிடம் மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.

மேலும், குளத்துப்பட்டியைச் சோ்ந்த கணேசன்- சங்கீதாவின் மகள் ஆராதனாவுக்கு (6) பாவை பவுண்டேசன் சாா்பில் ரூ. 19,420 மதிப்பில் காதொலிக் கருவியும் வழங்கப்பட்டது.

முன்னதாக ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது இவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 568 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ப. புவனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →