காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, இச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ச. செல்லதுரை தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் சு. தேவி, இணைச் செயலா் ஆா். அருண்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வு முடிவுகளை வெளியிட்டு, காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளா் மற்றும் ஆய்வாளா் பணியிடங்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்.
புல உதவியாளா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையிலோ, தனியாா் மூலமாகவோ நிரப்பாமல் நேரடியாக காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.