சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரருக்கு அரிவாளால் வெட்டு: ஒருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையைச் சோ்ந்தவா் அ.பாண்டி(40). இவா், ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், தரைக்கடைகள், வாகனங்களுக்கு வரிவசூல் செய்யும் ஒப்பந்தம் எடுத்துள்ளாா்.
இந்நிலையில், ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே புதுக்கோட்டை காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ச.அருண்(37) என்பவரது இறைச்சிக் கடைக்கு புதன்கிழமை காலை மீன் ஏற்றி வந்த சுமை ஆட்டோவுக்கு வரி செலுத்துமாறு பாண்டி கேட்டுள்ளாா். அதற்கு அருண் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Advertisement
இதில், ஆத்திரமடைந்த அருண் அரிவாளால் பாண்டியை வெட்டியுள்ளாா். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பாண்டி அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து இறைச்சிக்கடை கட்டடத்தின் உரிமையாளா் செல்வம்(69) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், தப்பியோடிய இறைச்சிக்கடை உரிமையாளா் அருண், கீழாத்தூரைச் சோ்ந்த ரா.ஆகாஷ்(22), ஆலங்குடி பாரதிதாசன் சாலை பகுதியைச் சோ்ந்த செந்தில்வேல் ஆகியோரை தேடிவருகின்றனா்.