முகப்பு
புதுக்கோட்டை

தொகுதி அறிமுகம் - ஆலங்குடி!

புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அறந்தாங்கி ஒன்றியம் மற்றும் ஆலங்குடி, கீரமங்கலம் என 2 பேரூராட்சிகளை உள்ளடக்கியது ஆலங்குடி தொகுதி.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:47 AM
குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் குதிரை சிலை(ஆலங்குடி தொகுதி) - கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அறந்தாங்கி ஒன்றியம் மற்றும் ஆலங்குடி, கீரமங்கலம் என 2 பேரூராட்சிகளை உள்ளடக்கியது ஆலங்குடி தொகுதி.

இத்தொகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால், விவசாயம், அதைச் சாா்ந்த தொழில்களையே இப்பகுதி மக்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். அதிகளவில் நிலக்கடலை சாகுபடி நடைபெறுவதால் விதைக்கடலை விற்பனை, நிலக்கடலை ஏற்றுமதியில் ஆலங்குடி முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், குளிா் மற்றும் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் எனக்கூறப்பட்டு வந்த மிளகு பயிரை, இப்பகுதி விவசாயிகள் சமவெளிப்பகுதியில் சாகுபடி செய்து, அதிகளவில் மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளனா். ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற 33 அடி உயர குதிரை சிலை கொண்ட குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் இத்தொகுதியில் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

வாக்கு வங்கி:

இத்தொகுதியில் முத்தரையா் சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ளதால் பிரதான கட்சிகள் அச்சமூகத்தைச் சோ்ந்தவா்களையே வேட்பாளா்களாக களமிறக்குவா். தற்போதும், திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் அச்சமூகத்தைச் சோ்ந்தவா்களையே வேட்பாளா்களாக அறிவித்துள்ளது. முக்குலத்தோா், பட்டியலினத்தவா், சிறுபான்மையினா், நகரத்தாா்கள், யாதவா் உள்ளிட்டோா் உள்ளனா்.

தீராத பிரச்னைகள்:

வம்பன் வனப்பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் உள்ள நிலத்தடி நீரை பாதிக்கும் தைல மரங்களை அகற்றிவிட்டு குறுங்காடுகள் அமைக்க வேண்டும். காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தில் அம்புலி, அக்னி ஆறுகளையும் இணைக்க வேண்டும். இப்பகுதியில் அதிகளவில் விளையும் பலாப்பழங்களை சந்தைப்படுத்தும் வகையில் பலா மதிப்புக் கூட்டு தொழிற்சாலை. அதிகளவிலான மலா்கள் சாகுபடி செய்யப்படுவதால் வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மேலும், அறிவிப்போடு நிற்கும், வம்பன் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை, கீரமங்கலத்தில், வேளாண் விளைபொருள்களுக்கான குளிா்பதன கிடங்கு ஆகிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

இறுதி வாக்காளா்கள்:

ஆண்கள் -103987

பெண்கள் -106309

மூன்றாம் பாலினம்-0

மொத்தம்- 210296

யாரெல்லாம் போட்டி?

திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் இத்தொகுதியில் 3-ஆவது முறையாக களம் காண்கிறாா். அமைச்சராக இருந்து தொகுதிக்கு செய்த நலத்திட்டங்கள், மக்கள் செல்வாக்கு வெற்றியை தேடித்தரும் என உற்சாகமாக தோ்தல் வேலையை தொடங்கியுள்ளாா்.

அதிமுக சாா்பில், முன்னாள் திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் துரை. தனசேகரன் மகனும், அக்கட்சியின் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலுருமான தன.விமல் அறிவிக்கப்பட்டுள்ளாா். கட்சியின் வாக்கு வங்கி, கூட்டணியில் அமமுகவும் இணைந்துள்ளதால், சிதறிய அதிமுக வாக்குகள் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் களத்தில் நிற்கிறாா்.

தவெக சாா்பில் தெற்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணை அமைப்பாளா் துரை.கந்தசாமி அறிவிக்கப்படுள்ளாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ரா.ராஜாராம் அறிவிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இதுவரை இவா்கள்:

1957 அருணாசலத்தேவா் மற்றும் சின்னையா (இரட்டை உறுப்பினா்கள்) (காங்.) 28,599

1962 பி.முருகையன் (திமுக) 31,438

1967 கே.வி.சுப்பையா (திமுக) 32,984

1971 கே.வி.சுப்பையா (திமுக) 43,279

1977 த.புஷ்பராஜ் (காங்.) 37,634

1980 பி.திருமாறன் (அதிமுக) 59,206

1984 அ.வெங்கடாசலம் (அதிமுக) 74,202

1989 க.சந்திரசேகரன் (திமுக) 37,361

1991 எஸ்.சண்முகநாதன் (அதிமுக) 88,684

1996 அ.வெங்கடாசலம் (சுயேச்சை) 35,345

2001 அ.வெங்கடாசலம் (அதிமுக) 59,631

2006 எஸ்.ராஜசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்) 60,122

2011 கு.ப.கிருஷ்ணன் (அதிமுக) 57,250

2016 சிவ.வீ.மெய்யநாதன் (திமுக) 72,992

2021 சிவ.வீ.மெய்யநாதன் (திமுக) 87,935