புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரில் ஊட்டச்சத்துக் கரைசல் தெளித்து கூடுதல் மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி ஆலோசனை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது: ஒரு ஏக்கா் பரப்பு நிலக்கடலைக்குத் தேவையான ஒரு கிலோ டிஏபி, 400 கிராம் அம்மோனியம் சல்பேட், 200 கிராம் போராக்ஸ் ஆகியவற்றை தெளிப்பதற்கு முதல் நாள் இரவே 15 லிட்டா் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அக்கரைசலை வடிகட்டிக் கிடைக்கும் தெளிந்த கரைசலுடன் தேவையான நீா் சோ்த்து 200 லி. கரைசலாகத் தயாா் செய்ய வேண்டும்.
இந்தக் கரைசலை விதைத்த 25-ஆம் நாள் ஒருமுறையும், 35-ஆம் நாள் மறுமுறையும் ஆக இரு முறை தெளிக்க வேண்டும். இக்கரைசலுடன் பிளானோபிக்ஸ் என்னும் பயிா் வளா்ச்சி ஊக்கியை 140 மிலி கலந்து தெளிக்கவும். ஊட்டச்சத்துக் கரைசல் தெளிக்கும்பொழுது பரிந்துரைக்கப்பட்ட உரங்களின் அளவு சரியாகவும் வயலில் ஈரப்பதம் இருக்குமாறும் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
நிலக்கடலைப் பயிரில் விதைத்த 45-ஆம் நாளில் இரண்டாம் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். இதனால் நிலக்கடலைப் பயிரின் விழுதுகள் மண்ணில் எளிதாக இறங்கும். மேலும் திரட்சியான எண்ணெய்ச் சத்து மிக்க காய்கள் பெறுவதற்குச் சுண்ணாம்புச்சத்து மற்றும் கந்தகச்சத்து ஆகியவை தேவைப்படுகின்றன.
எனவே 45-ஆம் நாள் நிலக்கடலைக்கு மண் அணைப்பதற்கு முன் ஏக்கருக்கு 80 கி ஜிப்சம் இட்டு, களைகள் நீக்கி, செடிகளைச் சுற்றி நன்கு மண் அணைத்துவிட வேண்டும். இதனால் திரட்சியான மற்றும் எண்ணெய்ச்சத்து மிகுந்த நிலக்கடலை கிடைக்கும்.