புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலிலுள்ள ஆத்மநாத சுவாமி கோவிலைச் சுற்றியுள்ள 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திருப்பெருந்துறை ஸ்ரீவாதவூராா் சமூக சேவை சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், அவா்கள் அளித்த மனு விவரம்: திருவாசகம் பிறந்த ஊரான திருப்பெருந்துறை (ஆவுடையாா்கோவில்) ஆத்மநாத சுவாமி கோயிலைச் சுற்றி 4 வீதிகள் உள்ளன. ஆண்டுக்கு 3 முறை இந்தக் கோயிலில் தேரோட்டம் நடைபெறும். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கின்றனா்.
இந்தச் சூழலில், நான்கு வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். பக்தா்கள் வந்து செல்வதற்கான வாகன நிறுத்தம் இல்லை. போதுமான அளவுக்கு வாகன நிறுத்தங்களை அமைக்க வேண்டும். குறுக்கே செல்லும் கால்வாய்களை மூடி பராமரிக்க வேண்டும்.
தேரோடும் வீதியில் அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது. அதேபோல, கோயில் முன்பு கனரக வாகனங்களை இயக்கவும் அனுமதிக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.