சேமிப்புக் கணக்கில் முறைகேடு? வங்கிக்குத் திரண்ட வாடிக்கையாளர்கள்
தஞ்சாவூரில் சேமிப்புக் கணக்குக்கு வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட முகவர் முறைகேடு செய்ததாகக் கூறி தொடர்புடைய வங்கியில் வாடிக்கையாளர்கள் வியாழக்கிழமை திரண்டனர்.
தஞ்சாவூரில் சேமிப்புக் கணக்குக்கு வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட முகவர் முறைகேடு செய்ததாகக் கூறி தொடர்புடைய வங்கியில் வாடிக்கையாளர்கள் வியாழக்கிழமை திரண்டனர்.
தஞ்சாவூர் திலகர் திடல் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ள நுகர்வோர்களில் சுமார் 20 பேர் வியாழக்கிழமை திரண்டனர். இந்த வங்கியில் கடன் மற்றும் சேமிப்புத் தொகை தொடர்பாக நியமிக்கப்பட்ட முகவர் தங்களிடம் வசூலித்து வந்ததாகவும், ஆனால், அத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருப்பது குறித்தும் முறையிட்டனர். தொடர்புடைய முகவர் நீக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது என வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால், வாடிக்கையாளர்கள் சப்தமிட்டதால் வங்கியில் சலசலப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மேற்குக் காவல் நிலைய போலீஸார் வங்கிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்யுமாறு போலீஸார் கூறினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தது:
இந்த வங்கி சார்பில் கடன் மற்றும் சேமிப்பு தொகையை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட முகவர் எங்களை அணுகி சேமிப்பு பணத்தை பெற்று வந்தார். ஓராண்டுக்குப் பிறகு வட்டி வழங்கப்படும் எனவும் கூறினார். இதன்படி, ஓராண்டு முடிவடைந்ததால் வங்கியில் அணுகி கேட்டபோது, எங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பதும், கணக்குத் தொடங்கியபோது செலுத்தப்பட்ட தொகையான ரூ. 2,000 மட்டும் இருப்பதும் தெரிய வந்தது. ஆனால், முகவரிடம் ரூ. 1.50 லட்சம் வரை கொடுத்தோம். அவரே போலியாக ஒரு கணக்குப் புத்தகத்தைத் தயாரித்து பதிவு செய்து கொடுத்திருப்பது தெரிய வருகிறது. இதுபோல, கிட்டத்தட்ட 300 பேரிடம் ஏமாற்றியுள்ளார் என்றனர்.