பிளாஸ்டிக் கழிவுகளை கால்வாயில் கொட்டினால் கடும் நடவடிக்கை: நகர் நல அலுவலர் எச்சரிக்கை
பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கால்வாய்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் நகர் நல அலுவலர் பிரேமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கால்வாய்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் நகர் நல அலுவலர் பிரேமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் பிரேமா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி கும்பகோணம் காமராஜ் தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அதிக அளவில் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வழங்கிய 10 -க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பங்கேற்ற நகர்நல அலுவலர் பிரேமா கூறியது:
துப்புரவு பணியாளர் தாங்கள் தினந்தோறும் சேகரிக்கப்படும் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள், எலக்ட்ரானிக் கழிவுகள் உள்ளிட்டவைகள் அடங்கிய குப்பைகள் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்களிடம் காண்பித்து , அவை தரம் பிரிக்கப்பட்டு, பழைய பொருள்கள் வாங்கும் கடையில் விற்கப்படும். இதில் வரும் பணத்தை துப்புரவு பணியாளர்களுக்கே ஊக்கத்தொகையாக வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், வாரந்தோறும் புதன்கிழமை அதிக அளவில் குப்பைகள் சேகரிக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம்.
இவ்வாறு செய்வதன் மூலம் துப்புரவு பணியாளர்கள் தங்களது பணியை புதிய உத்வேகத்துடன் செய்வார்கள்.
பொதுமக்களும் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை தரம்பிரித்து வைக்கவேண்டும். வீடுகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கால்வாய்களிலோ அல்லது வீட்டு வாசல் முன்பு கொட்டினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைகளில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. விரைவில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் விற்பனை செய்வபர்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், விற்பனையில் ஈடுபடும் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றார் அவர்.