காவிரி மேலாண்மை வாரியம்: போராட்டங்களை ஆதரிப்போம்: விக்கிரமராஜா
காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை ஆதரிப்போம் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா.
காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை ஆதரிப்போம் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா.
வணிகர் தின மாநில மாநாட்டை முன்னிட்டு, தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரமைப்பின் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி ஏற்கெனவே ஏப். 3, 5-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வணிகத்தின் நிலை மிக மோசமாக இருப்பதால் மீண்டும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க இயலாத சூழல் உள்ளது. ஏப். 11-ம் தேதி கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டுள்ளனர். இதை ஏற்று ஆலோசனை நடத்தி வருகிறோம். பொதுவாக, கடையடைப்பு இல்லாத அனைத்துப் போராட்டங்களையும் ஆதரிப்போம்.
தஞ்சாவூர் மாநகரை பொலிவுறு நகரமாகத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி. இம்மாநகரை நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும்போது மாநகராட்சி வணிக வளாகங்கள், காமராஜர் சந்தை, சரபோஜி சந்தை ஆகியவற்றில் கடை நடத்தும் எந்த ஒரு வணிகரும் பாதிக்காத வகையில் மாற்று இடம் இப்போது உள்ள வாடகை மற்றும் மீண்டும் அதே இடத்தில் கடை கிடைப்பதற்கான உறுதிச்சான்றும் வழங்கப்பட வேண்டும். மேலும், மாநகராட்சி கடைகளை ஒப்படைக்க ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும்.நிகழாண்டு மே 5-ம் தேதி வணிகர் தின நாளை வணிகர் உரிமை மீட்பு நாளாக நடத்தப்படவுள்ளது. இதையொட்டி சென்னையில் மாநாடு நடைபெறவுள்ளது என்றார் விக்கிரமராஜா.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் வீ. கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில துணைத் தலைவர் கே.பி. சுப்பிரமணியன், இணைச் செயலர் எஸ். சேகர், மண்டலத் தலைவர் எல். செந்தில்நாதன், வடக்கு மாவட்டத் தலைவர் சி. மகேந்திரன், செயலர் எஸ். சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.