பாபநாசம் வட்டம் பெருமாங்குடி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் மாலாபுரம் கண்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் காளிதாஸ், பொருளாளர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 22ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாபநாசம் பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் பாலு, மகளிரணி செயலாளர் உமா, நகரத் தலைவர் சுந்தரி, ஒன்றிய அவைத் தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.