"ஆண்டுதோறும் வாரிசுப் பணி வழங்க வேண்டும்'
ஆண்டுதோறும் வாரிசுப் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் குடந்தை கோட்ட ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் வாரிசுப் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் குடந்தை கோட்ட ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் தஞ்சாவூரில் ஏஐடியுசி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜெ. சந்திரமோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது, ஓய்வுபெறும் நாளன்றே பி.எஃப்., பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும்.
போக்குவரத்து கழகங்களில் பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்படும் வாரிசுப் பணிக்காக தற்போது சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் காத்திருக்கின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க உத்தரவிட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாகியும் வாரிசுப்பணி வழங்கிட எந்த அறிவிப்பும் இல்லை. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி, ஆண்டுதோறும் வாரிசுப் பணி வழங்க வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள 139 சதவீத அகவிலைப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். 13ஆவது ஊதிய உயர்வின்படி, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தையும் மாற்றி வழங்கிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பொதுச் செயலாளர் பி. அப்பாத்துரை, ஏஐடியுசி மாநில செயலாளர் சி. சந்திரகுமார், மாவட்டச் செயலாளர் ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் மல்லிதியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.