தஞ்சாவூரில் மார்ச் 22-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏஐடியுசி சார்ந்த அரசுக் கால்நடைப் பண்ணைத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுய உதவிக் குழு என்ற பெயரில் நடுவூர், ஈச்சங்கோட்டையில் உள்ள அரசுக் கால்நடைப் பண்ணைகளில் 30 பெண்கள் உள்பட 75 தொழிலாளர்கள் 2 முதல் 7 ஆண்டுகள் வரை தினக்கூலியாக தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இரு ஆண்டுகளில் 480 நாள்கள் பணிபுரிந்தால் நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற சட்டத்துக்கு மாறாக இவர்கள் வேலையைப் பறிக்கிற வகையில் கால்நடைத் துறை நிர்வாகம் நேரடியாக நியமிப்பதற்காக அறிவிப்பு கொடுத்து ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, தொழிலாளர்களுக்கு விரோதமானது.
எனவே தமிழக அரசு நடுவூர் மற்றும் ஈச்சங்கோட்டை கால்நடைப் பண்ணைகளில் நேரடி நியமனத்தைக் கைவிட்டு பல ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 22-ம் தேதி தஞ்சாவூர் ரயிலடி முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கிளைத் தலைவர் கே. பகத்சிங் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில செயலர் சி. சந்திரகுமார், அரசுப் பண்ணைத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் உ. அரசப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.