அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்
பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றார் பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு .
பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றார் பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு .
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், நாட்டாணிக்கோட்டை வடக்கு நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர் பேசியது:
பள்ளிக் கல்விக்கென ரூ. 27 ஆயிரத்து 533 கோடியும், உயர் கல்விக்கென ரூ. 5 ஆயிரம் கோடியும் அரசு சார்பில் செலவிடப்படுகிறது. மாணவர்களுக்கு என 14 வகையான நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் விதமான மன உறுதியோடு தயாராகி, பல துறைகளிலும் முத்திரை பதிக்கின்றனர். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றார்.
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அ. அங்கயற்கண்ணி தலைமை வகித்தார். ஆசிரியர் திருஞானம் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் வீராசாமி, எம். சுந்தர்ராஜன், நீலகண்டன், தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், செல்லதுரை, ஆசிரியர் பயிற்றுநர் வேம்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.