முகப்பு
தஞ்சாவூர்

பங்குனி பெருவிழா: குடந்தையில் 3 சிவாலயங்களில் திருக்கல்யாணம்

கும்பகோணத்தில் பங்குனிப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 3 சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

Updated On : 29 மார்ச், 2018 at 7:14 AM
பகிர்:

கும்பகோணத்தில் பங்குனிப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 3 சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சீர்வரிசைகளுடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பகோணம் நாகேஸ்வரன், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆகிய  மூன்று சிவாலயங்களிலும் பங்குனி உத்திர விழா கடந்த 20 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 21 ஆம் தேதி அந்தந்தக் கோயில்களின் பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து நாள்தோறும் காலை, மாலைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது.
விழாவின் சிறப்பம்சமாக செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்காக நாகேஸ்வரர் கோயில் மண்டபத்தில் நாகேஸ்வரரும், பெரியநாயகி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பின்னர் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றதும், திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதே போல, ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில் முன் மண்டபத்தில் ஆனந்தவள்ளி சமேத கம்பட்ட விஸ்வநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனிப் பெருவிழா நடைபெற்றதால் ஏராளமானோர் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசைகளுடன் வந்தனர். 
பின்னர் பந்தாடு நாயகி அம்பாளும், கோடீஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து 29 ஆம் தேதி தேரோட்டமும்,  30 ஆம் தேதி மூன்று கோயில்களிலும் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.