சுவாமிமலையில் பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் பள்ளி மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் பள்ளி மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (24) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும் சுவாமிமலை பகுதியில் உள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
மாணவியின் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தாய் மட்டுமே உள்ளார். தற்போது அந்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்த திருமணம் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், சுவாமிமலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருமண மண்டபத்துக்கு சென்று விசாரித்தனர். இதில் தகவல் உறுதியானதையடுத்து, போலீஸார் திருமணத்தை தடுத்து நிறுத்தி, மாணவியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்ததன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் தலைமையிலான அலுவலர்கள் மாணவியிடமும், அவரது தாயிடமும் விசாரித்ததுடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். பின்னர், 18 வயது வரும் வரை இந்த மாணவிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என தாயிடம் எழுதி வாங்கிச் சென்றனர்.