உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
உதகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் தொடர்பாக...
கோடை விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ள நிலையில் இன்று(மே 1) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் கோடை சீசனை முன்னிட்டு மே 1-ஆம் தேதி முதல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் காட்டேரி சந்திப்பிலிருந்து இடதுபுறமாக திரும்பி சேலாஸ், கெந்தளா, காட்டேரி டேம், கேத்தி, பாலாடா, கொல்லிமலை, லவ்டேல் வந்து மஞ்சனக்கொரை, பா்ன்ஹில் வழியாக உதகை நகருக்குள் வந்தடையலாம்.
Advertisement
அத்தியாவசிய பொருள்கள் (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) ஏற்றிவரும் வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மசினகுடி, முதுமலை, கர்நாடகம் செல்லும் முக்கிய சாலையாக கல்லட்டி மலைப் பாதை திகழ்ந்து வருகிறது.
36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப் பாதையில் சுற்றுலா வாகனங்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றன.
இந்நிலையில் கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில் கல்லட்டி மலைப் பாதை வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் டி.என்.43 என்ற நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்கள் மற்றும் வேறு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளூர் ஓட்டுநர் உரிமம் உள்ள வாகனங்கள் மட்டும் இந்த மலைப் பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், இதர பதிவு எண் கொண்ட வாகனங்கள் வைத்திருக்கும் உள்ளூர் மக்கள் காவல் துறையை தொடர்பு கொண்டு உரிய நுழைவு சீட்டு பெற்று வாகனங்களை கல்லட்டி மலைப் பாதை வழியாக இயக்கிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.