தஞ்சாவூர் சாயிபாபா கோயிலில் வருஷாபிஷேகம்
தஞ்சாவூரில் உள்ள சீரடி சாயிபாபா ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தஞ்சாவூரில் உள்ள சீரடி சாயிபாபா ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தஞ்சை மேலவெளி ஊராட்சியில் சீரடி சாயிபாபா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 12 வது ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை விக்னேசுவர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாஹாவாசனம், கும்பஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜைகளும், புண்யாகவாசனம், ரித்விக் வர்ணம், அங்குரார்பனம், வேதிகா பூஜை, மூல மந்திர ஜெப ஹோமமும், இரவு தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை, மஹா பூர்ணாஹூதி, பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது. தொடர்ந்து சீரடி சாயிபாபாவிற்கு பால், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகலில் மஹா ஆரத்தி எடுக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவு மெலட்டூர் பாகவதமேளா நாட்டிய நாடக அறக்கட்டளை சார்பில் ஆண்டாள் திருக்கல்யாணம் என்ற தமிழ் பாகவத மேளா நாட்டிய நாடகம் நடைபெற்றது. பின்னர் சீரடி சாயிபாபா மூர்த்தியின் ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சீரடி சாயிபாபா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.