கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோயிலில் துலா உற்ஸவத்தையொட்டி மகா அஷ்டமி பெருவிழா புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமி மகா அஷ்டமி பெருவிழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை மாலை முதல்கால யாகசாலை பூஜைகளும், சிறப்பு யாகமும் நடைபெற்றது. பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, 2ஆவது நாளாக வியாழக்கிழமை மகா அஷ்டமியையொட்டி ஸ்ரீசூக்த ஹோமம், சுதர்சன ஹோமம், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஜெகநாத பெருமாள் கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.