முகப்பு
தஞ்சாவூர்

பாலின சமத்துவ முறையில் சபரிமலை பிரச்னையை அணுக வேண்டும்

பாலின சமத்துவ முறையில் சபரிமலை பிரச்னையை அணுக வேண்டும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:30 AM
பகிர்:

பாலின சமத்துவ முறையில் சபரிமலை பிரச்னையை அணுக வேண்டும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கும்பகோணம் மானம்பாடி ஊராட்சி ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று பனை விதைகளை நட்ட அவர் கூறியது:  
வரும் டிசம்பர் 10-ல் திருச்சியில் தேசம் காப்போம் என்ற தலைப்பிலான மாநாடு நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வர்.  
சபரிமலை விவகாரத்தில் ரஜினிகாந்த் பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக் கூடாது என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார். பெண்களுக்கு வழிபாட்டு உரிமை வேண்டும் என்ற கருத்து பாரம்பரியத்தை அல்லது ஜதீகத்தை பாதிக்கும் செயல் ஆகாது, அது ஒரு ஜனநாயக உரிமை. அரசியலமைப்புச் சட்டத்தில் பாலின சமத்துவ உரிமையை பாதுகாக்க கூடிய வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை சட்டப்படியும், ஜனநாயகப்படியும் பார்க்க வேண்டும். பாலின சமத்துவம் என்ற முறையில் இப்பிரச்னையை அணுக வேண்டும். 
கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுக்கு திட்டமிட்டு ஒரு நெருக்கடியைத் தர வேண்டும் என்ற நோக்கில் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள், அங்கே தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அங்கு போராடக் கூடியவர்கள் அனைவரும் அய்யப்ப பக்தர்கள் என்ற முடிவுக்கு வர முடியாது என்றார் திருமாவளவன்.
முன்னதாக, பனை விதை நடும் நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் தமிழருவி, மண்டல செயலர் விவேகானந்தன், ஒன்றியச் செயலர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.