நெய்யப்படாத கைப்பைகளும் தடை செய்யப்பட்டவைதான் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழகத்தில் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜன. 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அளவிலான தடையை அரசு அறிவித்தது. அதில் பாலிப்புரப்பிலீன் மற்றும் பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் பைகளும் (தடிமன் வேறுபாடின்றி) அடங்கும்.
பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்கு அறிந்தனர். அதே சமயத்தில் பாலிப்புரப்பிலீன் பைகளின் (நெய்யப்படாத கைப்பைகள்) அமைப்பு, வண்ணம், இயல்பு ஆகியவை துணிப்பைகள் போலவே இருப்பதால், அதை துணிப்பை என மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
மேலும் இவ்வகை நெய்யப்படாத பைகளின் கூறு 'சிபெட்' என்கிற பாலிப்புரப்பிலீன் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நெய்யப்படாத கைப்பைகளும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளே.
தமிழகம் பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக மாற தொடங்கியிருந்தாலும், இவ்வகை நெய்யப்படாத கைப்பைகளை இனிப்பு அங்காடி, மருந்தகம், உணவகம், துணி கடைகளில் துணிப்பைகள் என தவறாகக் கருதப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது போன்ற பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகித பைகளை உபயோகிக்க வேண்டும்.