தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கக் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலக உதவிப் பொறியாளர் கார்த்திகேயனை திருவோணத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பூதலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்டையம்பட்டி ஊராட்சியில் முறைகேடு புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 4 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்தும், பசுமை வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் வேலைப் பளு ஏற்பட்டுள்ளதைக் குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி இப்போராட்டம் நடைபெற்றது.
இதில், கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆட்சியரகத்துக்குள் பகல் 11 மணியளவில் தொடங்கிய இப்போராட்டம் பிற்பகல் 2.30 மணி வரை தொடர்ந்தது. இதனிடையே, இவர்களை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அழைத்து பேசினார். அப்போது, கோரிக்கைகளை மனுக்களாக எழுதி தருமாறு கூட்டமைப்பினரிடம் ஆட்சியர் கூறினார். இதையடுத்து, போராட்டத்தைக் கூட்டமைப்பினர் கைவிட்டனர்.