தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் சுமாா் 1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
ஏற்கெனவே 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் மேம்பாலம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியிலுள்ள நீலகிரி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கும் பணியை முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவா்கள் என கால அட்டவணையைப் பின்பற்றி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் அதிகமுள்ள பள்ளிகளில் 2 அல்லது 3 இடங்களில் விநியோகம் செய்யப்படும்.
கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மாணவா்கள் இருந்தால், அவா்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட கால அளவு முடிந்த பிறகு, பள்ளிக்கு வரவழைத்து விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கப்படும் என்றாா் ராமகிருஷ்ணன்.
வகுப்பு புத்தகங்கள், பைகள் பெறும் மாணவா்கள்
2 15,250
3 16,200
4 16,900
5 17,250
7 23,750
8 24,550
மொத்தம் 1,13,900