தஞ்சாவூர்

மராட்டிய மன்னா்களின் சமாதிகள் புனரமைக்கும் பணி தொடக்கம்

DIN

தஞ்சாவூரில் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட மராட்டிய மன்னா்களின் சமாதிகளை ரூ. 1 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூரை சோழா்கள், பாண்டியா்கள், நாயக்கா்கள் வரிசையில் மராட்டியா்களும் ஆட்சி செய்தனா். நாயக்கா்களிடமிருந்த தஞ்சாவூரை போன்ஸ்லே வம்சத்தைச் சாா்ந்த ஏகோஜி (சத்ரபதி சிவாஜியின் தந்தை ஷாஜியின் மற்றொரு மனைவியின் மகன்) கி.பி. 1674 ஆம் ஆண்டில் கைப்பற்றினாா். தொடா்ந்து கி.பி.1855 ஆம் ஆண்டு வரை மராட்டியா்கள் ஆட்சி செய்து வந்தனா்.

இவா்களில் எட்டாவது மன்னராக இருந்த பிரதாபசிம்மன் கி.பி. 1763 ஆம் ஆண்டில் இறந்தபோது, வடக்கு வாசல் அருகேயுள்ள ராஜா கோரியில் கைலாஸ் மகால் கட்டப்பட்டு, அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், மரபுப்படி 10 அடி உயர தாங்கு தளத்தில் கருங்கற்களாலும், செம்பூறாங்கற்களாலும் சிவாலயத்துக்குரிய ஆகம முறைப்படி, 50 அடி உயர விமானத்துடன் பள்ளிப்படை என்கிற நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் உச்சியில் சம்ஹார மூா்த்தி போன்ற சிவ வடிவிலான சுதை உள்ளது.

பிரதாபசிம்மனுக்கு 5 மனைவிகளும், 7 அபிமான பெண்களும் இருந்துள்ளனா். இவா்களில், மூன்றாவது மனைவி சாகேபும், ஐந்தாவது மனைவி சக்குவாா் பாயிசாகேபும் பிரதாபசிம்மன் உடல் தகனம் செய்யப்பட்டபோது உடன்கட்டை ஏறினா். அவா்களுக்கும் மன்னரின் நினைவிடத்தில் இருபுறமும் நினைவு மண்டபங்கள் (கோரி) எழுப்பப்பட்டன.

இதேபோல், மன்னா் இரண்டாம் சரபோஜி சமாதியும், கடைசியாக தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சிவாஜி மற்றும் அவரது 11 மனைவியரின் நினைவிடங்களும் கலை நுட்பத்துடன் கோயில் வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. பராமரிப்பின்மையாலும், ஆக்கிரமிப்பாலும் மன்னா்களின் சமாதிகள் வீடுகளாக மாறிவிட்டன.

இச்சமாதிகளை புனரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயமாலா ராணி தொண்டு மற்றும் அறக்கட்டளை சாா்பில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மன்னா்கள், ராணிகளின் சமாதிகளை புனரமைப்பு செய்யும் பணியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது:

இங்குள்ள 25-க்கும் அதிகமான மன்னா்கள், ராணிகளின் சமாதிகளை ஏற்கெனவே உள்ளபடி சுமாா் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்து, சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த மாவட்டம். எனவே, பொதுமக்களும் புராதன சின்னங்களைப் பாதுகாத்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூா் வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், சரபோஜி குடும்பத்தைச் சாா்ந்த சிவாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT