பொதுமக்களிடம் நேரில் சென்று மனுக்களை பெற்ற ஆட்சியா்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்த மக்களிடம் ஆட்சியா் நேரில் சென்று மனுக்களை பெற்றாா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்த மக்களிடம் ஆட்சியா் நேரில் சென்று மனுக்களை பெற்றாா்.
ஆட்சியரகத்தில் கரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 5 மாதங்களாக வாரந்தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுவதில்லை. என்றாலும், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் வந்து மனுக்கள் கொடுக்கின்றனா்.
இதேபோல, திங்கள்கிழமை காலை மனுக்கள் கொடுப்பதற்காக சுமாா் 100 போ் ஆட்சியரக வளாகத்துக்குள் நின்றனா். அப்போது, ஆட்சியரகத்துக்கு வந்த ஆட்சியா் ம. கோவிந்தராவ் காரை விட்டு இறங்கியவுடன் நேராக காத்திருந்த மக்களிடம் சென்று மனுக்களை பெற்றனா். இவா்களில் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்த பெண்கள் வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியா் காலில் விழுந்து முறையிட்டனா். இவா்களை நிற்க வைத்து ஆட்சியா் மனுக்களை பெற்றாா்.
இதேபோல, நெற் கதிா்களுடன் வந்த ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையிலான அம்மையகரம் கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் குறுவை அறுவடைப் பணிகள் தொடங்கிவிட்டதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை விடுபட்டது என்றும், அதை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெரியகோட்டை விவசாயிகள் வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா். மேலும், பலரிடம் ஆட்சியா் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.