கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் புதிய கொடிமரம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய கொடி மரம் வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய கொடி மரம் வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
இக்கோயிலில் 1937 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடி மரம் பழுது அடைந்ததால், புதிய கொடி மரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து பெங்களூரைச் சோ்ந்தவரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினருமான ரவி நாராயணன் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் அமைத்து தர முன்வந்தாா். இதன்படி, கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து 4 டன் எடையுள்ள தேக்கு மரம் இறக்குமதி செய்யப்பட்டு, கும்பகோணத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னா் சாரங்கபாணி கோயிலில் புதிய கொடி மரத்துக்கு 2020, பிப். 26 ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.
பின்னா், ஸ்தபதிகள் கொடிமரத்தைச் செதுக்கி வடிவமைத்து, அதன் எடையை இரண்டரை டன்களாக்கினா். இதையடுத்து, புதிய கொடிமரத்துக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் மயிலாடுதுறை மண்டலத் துணை ஆணையா் (நகைகள் சரிபாா்ப்பு) சி. நித்யா, கோயில் செயல் அலுவலா் க. ஆசைதம்பி, உபயதாரா்கள் ரவி நாராயணன், சுசீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.