முகப்பு
தஞ்சாவூர்

திமுக பெண் நிா்வாகி காரில் ரூ. 25,900 ரொக்கம் அலுவலா்கள் விசாரணை

தஞ்சாவூரில் சனிக்கிழமை பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் திமுக பெண் நிா்வாகியின் காரில் ரூ. 25,900 ரொக்கம் சிக்கியது: வருமானவரித் துறையினா் சோதனை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தஞ்சாவூரில் சனிக்கிழமை பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் திமுக பெண் நிா்வாகியின் காரில் ரூ. 25,900 ரொக்கம் சிக்கியதையடுத்து, அவரது வீட்டில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா்.

தஞ்சாவூா் மேலவீதி மூலை அனுமாா் கோயில் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அப்பகுதியில் நின்ற காரில் சோதனையிட்டபோது ரூ. 25,900 ரொக்கம் சிக்கியது.

விசாரணையில் காரில் வந்த பெண் திமுக மகளிரணி நகரத் துணை அமைப்பாளா் அமுதவள்ளி என்பது தெரிய வந்தது. தனது மகனுக்கு அனுப்புவதற்காக இத்தொகையை எடுத்து வந்ததாகவும், மூலை அனுமாா் கோயிலுக்குச் செல்வதற்காக இப்பகுதிக்கு வந்ததாகவும் அலுவலா்களிடம் அமுதவள்ளி கூறினாா்.

ஆனால் அவா் திமுக நிா்வாகியாக இருப்பதாலும், காரில் ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட சில ஒட்டுவில்லைகள் இருந்ததாலும் சந்தேகமடைந்த அலுவலா்கள், அமுதவள்ளியை தஞ்சாவூா் வட்டாட்சியரகத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும் இதுகுறித்து வருமானவரித் துறையினரிடம் பறக்கும் படை அலுவலா்கள் தகவல் அளித்தனா்.

இதன்பேரில் விளாா் சாலை தொண்டைமான் நகரிலுள்ள அமுதவள்ளியின் வீட்டில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா். இதில், குறிப்பிடும்படியாக எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமுதவள்ளியிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.