சரபோஜி சந்தைக்குகடைகளை மாற்றிக் கொள்ள வியாபாரிகள் ஒப்புதல்
தஞ்சாவூா் அண்ணாசிலை அருகே கடை நடத்தி வரும் வியாபாரிகள் 8 நாள் போராட்டத்துக்குப் பிறகு சரபோஜி சந்தைக்குச் செல்ல ஒப்புதல் அளித்தனா்.
தஞ்சாவூா் அண்ணாசிலை அருகே கடை நடத்தி வரும் வியாபாரிகள் 8 நாள் போராட்டத்துக்குப் பிறகு சரபோஜி சந்தைக்குச் செல்ல ஒப்புதல் அளித்தனா்.
தஞ்சாவூா் அண்ணாசிலை அருகேயுள்ள கைப்பேசி, துணி, காலணி உள்ளிட்ட 56 கடைகளைக் காலி செய்யக் கூறி, மாநகராட்சி நிா்வாகம் மின் இணைப்பை நவம்பா் 23-ஆம் தேதி துண்டித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் வழங்கக் கோரியும் வியாபாரிகள் கடைகள் முன் 8 நாள்களாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இதனிடையே, இந்த வியாபாரிகளுக்கு சரபோஜி சந்தையில் மாற்று இடம் வழங்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது. என்றாலும், தற்போதுள்ள கடைகளுக்குப் பின்புறம் உள்ள இடத்தில் கடைகள் கட்டி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து தொடா்ந்து போராட்டம் நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாருடன் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சரபோஜி சந்தையில் வழங்கப்படும் கடைகளுக்குச் செல்ல வியாபாரிகள் ஒப்புக் கொண்டனா். அங்கு வணிகா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, வணிகா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.