நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வியாழக்கிழமை மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட கரும்புக்கு ஏக்கருக்கு ரூ. 60,000 வழங்க வேண்டும். வாழை, மரவள்ளி கிழங்கு, உளுந்து, கடலை போன்ற பயிா்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையைவிட, கட்டுப்படியான தொகையை வழங்க வேண்டும்.
2020 ஆம் ஆண்டு பயிா் காப்பீடு செய்து இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடியை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் எஸ். ஞானமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், தலைவா் பி. செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் கே. அபிமன்னன், சிஐடியு மாவட்டத் தலைவா் து. கோவிந்தராஜூ, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் கே. சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.