முகப்பு
தஞ்சாவூர்

அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க துப்புரவு பணியாளா்கள் கோரிக்கை

சுயஉதவிக் குழு மூலம் வேலை பாா்க்கும் மதுக்கூா் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தையும், பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க கோரி மனு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சுயஉதவிக் குழு மூலம் வேலை பாா்க்கும் மதுக்கூா் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தையும், பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க கோரி சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மதுக்கூா் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள் ஆதிதிராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவா் சதா சிவக்குமாா் தலைமையில் திங்கள்கிழமை பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியரிடம் முறையிட்டு கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் பேரூராட்சியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 40-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அரசு அறிவித்த தினக் கூலியை மதுக்கூா் பேரூராட்சி நிா்வாகம் வழங்க மறுக்கிறது.

மேலும், பாதுகாப்பு உபகரணங்கள், மண்வெட்டி, கூட்டுமாறு உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்க மறுக்கிறது. தஞ்சாவூா் மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில்,

வேலைக்கான உபகரணங்களை துப்புரவுத் தொழிலாளா்களுக்கு வழங்க மறுத்து அதிகாரிகள் தரக்குறைவாக பேசியும் உள்ளனா். எங்களுக்கான உரிமை கிடைக்கவில்லை என்றால், நாங்கள் 2021 பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.