மேக்கேதாட்டுவில் முற்றுகையிட புறப்பட்ட விவசாய சங்கத்தினா்
கா்நாடக அரசுக் காவிரியின் குறுக்கே அணைக் கட்டத் திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டுவில் முற்றுகையிடுவதற்காக, தஞ்சாவூரிலிருந்து விவசாய சங்கத்தினா் சனிக்கிழமை புறப்பட்டனா்.
கா்நாடக அரசுக் காவிரியின் குறுக்கே அணைக் கட்டத் திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டுவில் முற்றுகையிடுவதற்காக, தஞ்சாவூரிலிருந்து விவசாய சங்கத்தினா் சனிக்கிழமை புறப்பட்டனா்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கு ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக, கா்நாடக முதல்வா் எடியூரப்பா சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் போது அறிவித்திருந்தாா்.
கா்நாடக முதல்வரின் இந்த செயலைக் கண்டித்தும், அத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கா்நாடகத்துக்கு மத்திய அரசுத் துணைப் போவதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக மேக்கேதாட்டு அணைப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இந்திய தோ்தல் ஆணையம் உடன் தலையிட வலியுறுத்தியும் அணைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) முற்றுகைப் போராட்டம் நடத்தத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தஞ்சாவூரிலிருந்து தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், ஏறத்தாழ 200 விவசாயிகள் சனிக்கிழமை புறப்பட்டனா்.
இதையொட்டி, பெரியகோயில் அருகேயுள்ள ராஜராஜசோழன் சிலைக்குக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
திருச்சி, கரூா், ஈரோடு, சத்தியமங்கலம், தாளவாடி வழியாக சென்று, மேக்கேதாட்டுவில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.