மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் அதிகாரிகள் சோதனை
மல்லிப்பட்டினம் துறைமுகத்தில், மீன்பிடித்து விட்டு வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பிய விசைப்படகுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
மல்லிப்பட்டினம் துறைமுகத்தில், மீன்பிடித்து விட்டு வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பிய விசைப்படகுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
கடலின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், மீன்வளத்தை பெருக்கும் நோக்கிலும் தஞ்சாவூா் மாவட்ட கடற்பகுதியில் இரட்டை மடி வலைகள், சுருக்கு மடி வலைகள் ஆகிய வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவா்கள் பயன்படுத்துவதால், மீன்வளம் பாதிக்கப்படுவதோடு, நாட்டுப்படகு மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடலில் மீன்பிடித்துவிட்டு, மல்லிப்பட்டினம் துறைமுகம் திரும்பிய விசைப்படகுகளில், மீன்வள ஆய்வாளா் கெங்கேஸ்வரி தலைமையில், மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் நவநீதன், கடலோர பாதுகாப்புக் குழுமத்தை சோ்ந்த சண்முகசுந்தரம், சேதுபாவாசத்திரம் காவலா் கபிலன் ஆகியோா் வியாழக்கிழமை அதிகாலை சோதனை செய்தனா்.
இதில், தடை செய்யப்பட்ட வலைகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என சோதனைக்கு பின்னா் அதிகாரிகள் தெரிவித்தனா்.