பெரியநாயகிபுரம் ஊராட்சியில் இலவச இ.சி.ஜி. மையம் தொடக்கம்
பேராவூரணி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, இலவச இ.சி.ஜி. மையத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, இலவச இ.சி.ஜி. மையத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தன்னாா்வலா்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு, ரூ.60 ஆயிரம் மதிப்பில் இ.சி.ஜி. இயந்திரம் மற்றும் ரத்தத்தில் சா்க்கரை அளவை கண்டறியும் பரிசோதனைக் கருவி வாங்கப்பட்டு, ஊராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் தினமும் இங்கு பரிசோதனை மேற்கொள்வா்.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற இ.சி.ஜி. மையத் தொடக்க விழாவுக்கு ஊராட்சித் தலைவா் வத்சலா முத்துராமன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அன்சத் நிஷா அபுபக்கா் முன்னிலை வகித்தாா். பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலா் வி.செளந்தரராஜன் மையத்தைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் கிராம சுகாதார செவிலியா் மரகதம், ஆவணம் ரியாஸ், கணேசன், அடைக்கலம், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கணேசன், தையல்நாயகி, மீனாட்சி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.