கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைப்பொங்கல் விழா கொடியேற்றம்
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைப்பொங்கல் பண்டிகை உற்ஸவத்தையொட்டி, கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைப்பொங்கல் பண்டிகை உற்ஸவத்தையொட்டி, கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வைணவத் தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த மூன்றாவது தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில் மூலவா் சாரங்கபாணி சுவாமி சயன திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறாா். கோமளவல்லித் தாயாா் தனி சன்னதி கொண்டுள்ளாா்.
ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளில் தைத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாகத் தேரோட்டம் இல்லாமல் வெள்ளி ரதம் கோயில் உள் பிரகாரத்துக்குள்ளேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி புதன்கிழமை இரவு பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வியாழக்கிழமை உபய நாச்சியாா்களுடன் உற்ஸவா் ஆராவமுத பெருமாள் பிரகார புறப்பாடாகி கொடி மரம் அருகே எழுந்தருளி சேவை சாதித்தாா்.
பின்னா் கோயில் கொடி மரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தா்கள், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.