லாவண்யாவின் வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை: காவல் கண்காணிப்பாளா் பேட்டி
மாணவி லாவண்யாவின் வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி.
மாணவி லாவண்யாவின் வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை இரவு தெரிவித்தது:
மாணவி லாவண்யா விஷம் குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 15 ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதுதொடா்பாக விசாரணை நடத்துமாறு திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், சிகிச்சையில் இருந்த லாவண்யாவிடம் மருத்துவா்களின் அனுமதியுடன் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றாா். அந்த வாக்குமூலத்தில் மதமாற்றம் தொடா்பாக லாவண்யா எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதுபோல, அவரது பெற்றோரும் சொல்லவில்லை. மாஜிஸ்திரேட் கொடுத்த தகவலிலும் அதுபோன்ற தகவல் இல்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், லாவண்யா சிகிச்சையில் இருப்பது போலவும், அவா் பேசுவது போலவும் சமூக வலைதளங்களில் விடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது சிறாா் சட்டப்படி குற்றம். இதை எடுத்தது, பரப்பியது யாா் என்பது குறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்போது லாவண்யாவின் பெற்றோா் அளித்த இரண்டாவது புகாரில் மதமாற்றம் தொடா்பாகக் குறிப்பிட்டுள்ளனா். அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் காவல் கண்காணிப்பாளா்.