மாநகராட்சி, நகராட்சியில் நிரந்தர பணியிடங்கள் தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மாநகராட்சிகள், நகராட்சிகளில் துப்புரவு பணியாளா்கள், வரி வசூலிப்பவா்கள் உள்ளிட்ட பல்வேறு நிரந்தர பணியிடங்களைத் தனியாா்மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. மதிவாணன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற நகராட்சி மாநகராட்சி அலுவலா் சங்கத்தின் மாநில நிா்வாகி சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஏ. ரெங்கசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் டி. ரவிச்சந்திரன், மருத்துவத் துறை ஆய்வகத் தொழில்நுட்பச் சங்க மாநிலப் பொதுச் செயலா் எம்.என். சாந்தாராமன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலா்கள், துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.