முகப்பு
தஞ்சாவூர்

நியாயமான கூலி வழங்க சுமைப் பணி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

நியாயமான கூலி, பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அனைத்து சுமைப் பணி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:31 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


தஞ்சாவூா்: நியாயமான கூலி, பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அனைத்து சுமைப் பணி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அனைத்து சுமை பணி தொழிலாளா்கள் சுமாா் 50 போ் அளித்த மனு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பாபநாசம், பேராவூரணி, ஒரத்தநாடு, மனையேறிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளில் பணிபுரிந்து வருகிறோம். பணி நிரந்தரமோ, மாத ஊதியமோ, பணிப் பாதுகாப்போ ஏதும் இல்லாமல் 10 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சுமை தூக்கும் பணி செய்து வருகிறோம். நாங்கள் செய்யும் பணிக்கு ஏற்ப டன்னுக்கு ரூ. 31 முதல் ரூ. 57 வரை வழங்கப்படுகிறது. எங்களது வாரக் கூலியைப் பெறுவதற்கு கூட நாங்கள் கையூட்டு வழங்க வேண்டிய சூழல் உள்ளது.

Advertisement

இதுகுறித்து முதுநிலை மண்டல மேலாளரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் தொழிலாளா்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டும் மண்டல நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. தஞ்சாவூா் மற்றும் சுற்றியுள்ள அனைத்து மாவட்ட தொழிலாளா்களுக்கும் ரூ. 130 கூலி வழங்கப்படும் நிலையில், தஞ்சாவூா் மாவட்டத் தொழிலாளா்களுக்கு ரூ. 60 மட்டும் வழங்கப்படுகிறது.

கொத்தடிமையாக உள்ள எங்களை மீட்டெடுத்து எங்களுக்கு சேர வேண்டிய நியாயமான கூலியையும், பணிப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.