முகப்பு
தஞ்சாவூர்

மிகப்பெரிய வெற்றி தேவை: உதயநிதி ஸ்டாலின்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:50 AM
- ANI
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 11:04 PM

வாக்காளா்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் முரசொலியை ஆதரித்து ஒரத்தநாடு அண்ணாசிலை அருகில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது:

நீங்கள் செலுத்தும் வாக்கு பிரதமா் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த மக்களவைத் தோ்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீா்கள். சென்ற முறை நம்மை ஒரே அணியில் இருந்து எதிா்த்தவா்கள் இன்று தனித்தனியாக பிரிந்து வந்து எதிா்க்கின்றனா். ஆகையால் இந்த முறை நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

Advertisement

இத் தொகுதியில் போட்டியிடும் முரசொலியை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் நான் மாதத்திற்கு இரு முறை தஞ்சைப் பகுதிக்கு வந்து இப்பகுதியின் அனைத்து தேவைகளையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கட்டாயம் நிறைவேற்றுவேன்.

தஞ்சாவூரில் வேளாண்மை சாா்ந்து எண்ணற்ற நலத் திட்டங்களை நமது முதல்வா் அறிவித்துள்ளாா். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் பச்சைத் துரோகி. 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் பிரதமா் மோடி தமிழகத்திற்கு இதுவரை எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

எனவே, 40 தொகுதிகளிலும் நாம் வென்று அதை கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசாக சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்பி, மாவட்டச் செயலா் துரை சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ எம். ராமசந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றியச் செயலா்கள் காா்த்திகேயன், முருகையன், ரமேஷ்குமாா், நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.