இன்னும் 16 நாள்களே உள்ளன! - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
இன்னும் 16 நாள்களே உள்ளன தீவிரமாக வேலை செய்யுங்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டமான கள்ளக்குறிச்சியில் திமுகவினர் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நேரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிரசாரம் செய்தபோது வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாள்களே உள்ளதால், தீவிரமாக வேலை செய்யுங்கள் என்று அன்புடன் எச்சரித்தார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜி.ஆர் வசந்தவேலுவை ஆதரித்து அரசூர் கூட்டு, சாலையில் அவர் பேசியபோது கூட்டம் அதிகமாக இருந்தது. அதில் பேசிய உதயநிதி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கருத்துகளை கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த திட்டமும் இல்லை. பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயரே இல்லை. அப்படி தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவையும் அடிமைக் கூட்டத்தையும் நாம் புறக்கணிக்க வேண்டும். இந்த சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அணிக்கும் தில்லி அணிக்கும் இடையே நடைபெறுகிறது. ஜெயித்து காட்ட வேண்டும் என்று அவர் கூறியபோது தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
Advertisement
தேர்தலுக்கு இன்னும் 16 நாள்கள் உள்ளன. திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள், வீடு, வீடாகச் சென்று வாக்குகளை சேகரியுங்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன செய்வோம் என்பதை எடுத்துக் கூறுங்கள்.
பாஜக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்னவாகும் என்பதை மக்களிடம் எடுத்துரைத்து, வாக்குச் சேகரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின், அவரது பேச்சு தங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது என்று திமுகவினர் கூறினர்.