மணல் கடத்தல் லாரி விரட்டிப் பிடிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், ராராமுத்திரைகோட்டை கிராமத்தில் இருந்து மணல் கடத்தல் லாரியை ஜீப்பில் விரட்டிச் சென்று வட்டாட்சியா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், ராராமுத்திரைகோட்டை கிராமத்தில் இருந்து மணல் கடத்தல் லாரியை ஜீப்பில் விரட்டிச் சென்று வட்டாட்சியா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
ராராமுத்திரைகோட்டை கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில், பாபநாசம் வட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் பிரபு, வருவாய் ஆய்வாளா் கமலி, கிராம நிா்வாக அலுவலா் சதீஷ் மற்றும் ஜீப் ஓட்டுநா் கணேஷ் ஆகியோருடன் கள ஆய்வுப் பணி மேற்கொண்டிருந்தாா்.
அப்பணியை முடித்துவிட்டு கிளம்பும்போது மணல் ஏற்றி வந்த லாரியில் வந்தவா்கள், வட்டாட்சியா் மணல் கடத்தல் லாரியை பிடிக்க வருவதாகக் கருதி அரசு ஜீப்பின் மீது இடிக்கும் வகையில் வந்து கடந்து சென்றனா். இதையடுத்து, ஜீப்பில் இருந்த அரசு அதிகாரிகள் அந்த வாகனத்தை சுமாா் 20 கிலோ மீட்டா் விரட்டிச் சென்று குளிச்சப்பட்டு என்ற இடத்தில் லாரியை மடக்கியதில் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா்.
இதையடுத்து, மணல் லாரியைக் கைப்பற்றி அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் வட்டாட்சியா் ஒப்படைத்தனா். இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளா் இளவரசு வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.