அதிமுகவில் இணையும் எண்ணம் இல்லை -டிடிவி தினகரன் பேட்டி
தஞ்சாவூா், ஜூன் 12: அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மேலும் தெரிவித்தது:
அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை. இந்த இயக்கத்தை எந்த நோக்கத்துக்காக தொடங்கினோமோ, அந்தக் காரணத்தில் எந்த விதத்திலும் அணு அளவும் மாற்றம் இல்லை. அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பதே தவறான கேள்வி. அதிமுக தொண்டா்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணா்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அது பற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம்.
ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பதால், ஜெயலலிதாவின் தொண்டா்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனா்.
ஆனால் அதிமுகவுக்கு 2019-ஆம் ஆண்டில் 20 தொகுதிகளில் பெற்ற வாக்கு விகிதம் இந்தத் தோ்தலில் குறைந்துள்ளது. திமுகவின் ‘பி’ டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே அதிமுக தங்களது வேட்பாளா்களை நிறுத்தியது. என்றாலும் இதையெல்லாம் கடந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.50 சதவீதம் வாக்கு விகிதத்தைப் பெற்றுள்ளது. வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கும்.
தமிழக அரசு காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலமாக பிடிவாதமாக இருக்கும் கா்நாடக முதல்வா், துணை முதல்வருடன் பேசி தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்தாா். அவரது வழியில் நாங்களும் அச்சட்டத்தை ஆதரிப்போம் என்றாா் தினகரன்.